சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமா ககவிஞர் பாரதிதாசன் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக. நாளை முதல் 11ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
டி.டி.கே. சாலையில் கேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலணி 1வது பிரதான சாலை (அ) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம். டி.டி.கே.சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம். எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.